சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே மறைவு...அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும்: ஆஸி., பிரதமர் அறிவிப்பு..!!

மெல்போர்ன்: ஷேன் வார்னேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று திடீரென மரணம் அடைந்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னே ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக பணியாற்றியதுடன், சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கருத்துகளை பதிவிட்டு வந்தார்.
52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் நேற்று பிணமாக கிடந்தார். அசைவின்றி கிடந்த அவருடைய இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க டாக்டர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தெரிகிறது. வார்னேவின் மரணத்தை அவரது தனிப்பட்ட விஷயங்களை நிர்வகித்து வரும் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால் அவரது சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஷேன் வார்னேவுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களில் வார்னேவும் ஒருவர் என்று புகழாரம் சூட்டினார். அவருடைய இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.