கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: 11 பேர் குற்றவாளிகள்...8ம் தேதி தண்டனை விவரம் அறிவிப்பு..!!

மதுரை: பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் 8ம் தேதி அறிவிக்கப்படும் என மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பொறியியல் கல்லூரி மாணவரான இவர், கடந்த 2015ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ்.
இவர் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியைக் காதலித்ததால், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 11 பேர் மீது திட்டமிட்டு ஆணவக்கொலை செய்து உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
இதில் 2 பேர் இறந்த நிலையில், ஏனைய 15 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் 8ம் தேதி அறிவிக்கப்படும் என மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.